மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தும் வகையில் கருத்து! குஷ்பு மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்க முடிவு.
தனது அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக பயன்படுத்தியுள்ள அவருடைய இந்த கருத்து மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும், சிறுமைப்படுத்தும் விதத்திலான கருத்தாகும்.
மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தும் வகையில் கருத்து கூறிய குஷ்பு மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தமழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுபாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, நேற்றைய முன்தினம் பாஜக-வில் இணைந்த திரைக்கலைஞர் குஷ்பு சுந்தர், அக்-13 அன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்பொழுது, காங்கிரஸ் கட்சியை “மூளை வளர்ச்சி இல்லாத கட்சி”என பேசியுள்ளார்.
இது குறித்து விரிவான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால், மாற்றுத்திறனாளிகள் விரோத, சட்டவிரோத மற்றும் தண்டனைக்குரிய தனது கருத்திற்கு வருத்தமோ, மறுப்போ குஷ்பு இதுவரை தெரிவிக்கவில்லை. தனது அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக பயன்படுத்தியுள்ள அவருடைய இந்த கருத்து மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும், சிறுமைப்படுத்தும் விதத்திலான கருத்தாகும். ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016 பிரிவு 92(a)ன்படி, உள்நோக்குடன் மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் வகையில் பொதுவெளியில் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இக்குற்றத்திற்கு 6 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் உண்டு. எனவே, மாநிலம் முழுவதும் தங்களுக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டக்குழுக்கள் சார்பில் உடனடியாக புகார் அளிக்கவும், காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்ய வலியுறுத்தவும் சங்கத்தின் மாநில தலைமை முடிவு செய்துள்ளது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.