சென்னை வரட்டும்... அரசியல்தான்... சசிகலாவின் திட்டம் பற்றி விவரிக்கும் வழக்கறிஞர்..!
அரசியல் ரீதியான கருத்துகளுக்கு விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து சசிகலா விளக்கம் அளிக்க உள்ளார் என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்த சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை ஆகிவிட்டனர். சுதாகரனுக்கு அபராத தொகை செலுத்துவதில் தாமதம் ஆகிவிட்டது. விரைவில் சுதாகரன் சார்பில் அபராத தொகை செலுத்தப்பட்டுவிடும். அவரும் விரைவில் விடுதலை அடைந்துவிடுவார். சிறையில் இருந்து சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறை அதிகாரிகள் நன்னடத்தை சான்றிதழ் வழங்கியுள்ளனர். இருவரும் சிறையில் தோட்ட வேலைகள் செய்ததோடு கன்னடம் படித்து தேறியுள்ளனர்.
அதிமுகவின் கொள்கைகள், விதிகளில் அதிமுக தொண்டர்கள் மட்டுமே கட்சி கொடியைப் பயன்படுத்த வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. அதிமுக பொதுசெயலாளராக சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, தற்போது சிட்டி சிவில் நீதிமன்றதுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், சசிகலா காரில் அதிமுக கட்சி கொடியை கட்டி சென்றதும், கட்சி கொடியைப் பயன்படுத்தியதும் தவறில்லை.
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதால் என்ன சர்ச்சை ஏற்பட்டுவிட்டது. சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியில் இருந்து நீக்கியதாக யாரும் கூறவும் இல்லை. சசிகலா அதிமுக உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள். அவர் சிறையில் இருக்கும்போது அது எப்படி முடியும்? அரசியல் ரீதியான கருத்துகளுக்கு விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து சசிகலா விளக்கம் அளிக்க உள்ளார். மக்களையும் விரைவில் சந்திக்க உள்ளார்.” என்று ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.