தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா..? அதையெல்லாம் ஏற்க முடியாதுங்க... பாஜகவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடியார்..!
தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவையை ஏற்க இயலாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையிலேயே எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த மாதம் அறிவித்தனர். ஆனால், அதிமுக அறிவித்த முதல்வர் வேட்பாளரை ஏற்காமல் பாஜக போக்குக் காட்டிவருகிறது. முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும்; அதிமுக ஆட்சி என்று சொல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பேசிவருகிறார்கள் பாஜகவினர்.
இந்நிலையில் இன்று சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாளை முதல் 31-ம் தேதி வரை ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன்.” என்று தெரிவித்தார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, “தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி அமைச்சரவையை ஏற்க இயலாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.