கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாத  அறிவுப்புகளையும் சேர்த்து நிறைவேற்றுவோம் என்று பேசிய முதலமைச்சர்,  சட்டமன்றத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டத்தொடரின், மூன்றாவது நாளான இன்று திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும் விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கடந்த மே 7 ஆம் தேதி பதவியேற்ற அன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து செலவினங்களையும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு ஆகிய ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டேன். 

முதல் கையெழுத்து:

மேலும் இந்த ஐந்தில், முதல் நான்குமே திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை. அதோடு, கடந்த பத்து மாதங்களுக்குள், முதன்முறையாக வேளாண்மைக்கென்று தனியாக இரண்டு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் சுமார் 55 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. கூட்டுறவு அமைப்புகள் மூலம் வழங்கப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட ரூபாய் 5 ஆயிரத்து 250 கோடி நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசிற்கு ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் மொழி தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.

நிறைவேற்றிய திட்டங்கள்:

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைத் செயல்படுத்தப்படுள்ளது. பத்திரிகையாளர்கள், இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், மீத்தேன்/நியூட்ரினோ மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டுவழிச்சாலைத் திட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள், பொதுமக்கள் மீது போடப்பட்ட 5,570 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

NEET தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவைப் சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. கொரோனா சிகிச்சை பணியில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு மற்றும் காவல் துறையில் உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள், குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

208 வாக்குறுதிகள் நிறைவேற்றம்:

எனவே இந்த அரசினால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளோடு, இடம் பெறாத அறிவிப்புகளும் அடங்கும். வாக்குறுதிகளைத் தவிர, தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல்வேறு கொள்கை அளவிலான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பலவகையான நலத்திட்ட உதவிகள் என சொல்லாதவற்றையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாத அறிவுப்புகளையும் சேர்த்து நிறைவேற்றுவோம் என்று பேசிய முதலமைச்சர், சட்டமன்றத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க: எந்த ரூபத்தில் வந்தாலும் முதலமைச்சர் எதிர்ப்பார்.. நுழைத்தேர்வுக்கு எப்போதும் நோ தான்.. அமைச்சர் உறுதி..