அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பிக்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை.. என்ன தெரியுமா..?
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு ஆட்சியர்கள், எஸ்.பிக்களுடன் ஆலோசனை நடத்துக்கிறார்.
தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களை முற்றிலும் அழித்தாக வேண்டும். அதனை யாரும் சிறிதளவு கூட பயன்படுத்தாமல் தடுத்தாக வேண்டும். அதன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு சட்டவழியிலான அனைத்து முறைகளையும் பின்பற்றி வருகிறது. அதேநேரத்தில் போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அரசின் மிக முக்கியக் கடமையாக நான் நினைக்கிறேன். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இதன் ஒருபகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ஆம் நாளை போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
மேலும் படிக்க:மொத்தமாக ஒழிச்சு கட்ட பிளான் போட்ட ஸ்டாலின்..! அதிமுக, பாஜக எம்ஏல்ஏக்களுக்கு பகிரங்க அழைப்பு..
அன்றைய நாள், பள்ளி கல்லூரிகளில் இதுதொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போதையின் தீமைகள் குறித்த காணொளிக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தங்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படும். அன்றைய நாள் தங்களது தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தாங்களும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . இது அரசியல் பிரச்சினை அல்ல நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்னை. குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை குறித்த பிரச்சினை எனவே நீங்கள் இதில் உங்கள் பங்களிப்பினை வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்ச்சியான பரப்புரைகளின் மூலமாகத்தான் போதைப் பொருட்களின் தீமையை உணர்த்த முடியும். அதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம். போதைப் பாதை அழிவுப்பாதை என்பதை உணர்த்துவோம்!
அதன் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுப்போம். என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் நாளை போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்களுடன் ஆலோசனை நடத்துக்கிறார்.
மேலும் படிக்க:கத்திப்பாரா விபத்து.. நிவாரண தொகையை அறிவித்த முதல்வர் ஸ்டாலின் !