CMStalin : அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்... அகவிலைப்படியை உயர்த்தினார் மு.க.ஸ்டாலின்!!
அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் , ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 1-1-2022 முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், சி மற்றும் D பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறபித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என 7-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள். அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1-1-2022 முதல் 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
மேலும், பொங்கல் பரிசாக சி மற்றும் டி பிரிவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், முன்னாள் கிராம நிருவாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக. அரசுக்கு தோராயமாக 169.56 கோடி ரூபாய் அளவிற்கு செலவினம் ஏற்படும். தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்தச் சூழ்நிலையிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, அகவிலைப் படியினை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், சி மற்றும் டி பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழக முதல்வர் அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வுக்கு சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் கூறுகையில், இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த அகவிலைப்படி உயர்வு, கொடிய கோவிட் நோயை எதிர்த்துப் போராடிய மற்றும் தொற்றுநோய்களின் போதும் பணியாற்றிய அனைத்து அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் செயலாக அமையும். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.