"மஞ்சள் பை இயக்கத்தை துவங்கியதாலே எனக்கு மஞ்சள்தான் பிடிக்குமுன்னு நீங்களே ஒரு முடிவுக்கு வந்து, ஐஸ் வைக்க பார்க்குறீங்களா?"

தமிழகத்தின் சட்டமன்ற கூட்டத்தொடர் 2022ன் துவக்கத்தில் பெரிய அளவில் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெறும் மூன்றே நாட்கள் நடத்தப்பட்டு முடித்துக் கொண்டனர். காரணம்? ஒமைக்ரான் தொற்று பரவல்தான். கோட்டையில் உள்ள சட்டப்பேரவையில் மிக ஹைடெக்காக நடத்தப்பட இருந்த இந்த கூட்டமானது, கலைவாணர் அரங்கில் ஓரளவு சிம்பிளாகவே கூடி முடிக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சரி அதான் முடிஞ்சு போச்சே அப்பவே! அதுக்கு இப்ப என்னவாம்? என கேட்கலாம் நீங்கள்.

மேட்டர் இருக்குது பாஸ்..

அதாவது கூட்டத்தொடருக்காக வந்த அத்தனை பேருக்கும் நோய்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு, அதன் அடையாளமாக மஞ்சள் நிறத்தில் அடையாள அட்டை தர ஏற்பாடு செய்தனர். அந்த மஞ்சள் நிற அட்டையை கழுத்தில் தொங்க விடுவதற்கு வசதியாக மஞ்சள் நிற கயிறும் இணைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர் உயரதிகாரிகள். அதன் சாம்பிளை தயார் செய்து முதல்வரிடம் காட்டி, ஒப்புதல் கேட்டுள்ளனர்.

எல்லாம் மஞ்சள் நிறமாக இருப்பதை பார்த்து கடுப்பாகிவிட்டாராம் முதல்வர். ‘என்ன மஞ்சள் அட்டை, மஞ்சள் கயிறு? எல்லாமே ஏன் மஞ்சளா இருக்குது! மஞ்சள் பை இயக்கத்தை துவங்கியதாலே எனக்கு மஞ்சள்தான் பிடிக்குமுன்னு நீங்களே ஒரு முடிவுக்கு வந்து, ஐஸ் வைக்க பார்க்குறீங்களா? இந்த மாதிரி நடந்துக்குறதுல இருந்து எப்பதான் வெளியில வருவீங்க? உடனே இந்த மஞ்சள் கயிறை கழற்றுங்க, மஞ்சள் அட்டையை நீக்குங்க. எம்.எல்.ஏ.க்களுக்கு ப்ளூ கலர்ல அட்டை கொடுங்க. மத்தவங்களுக்கு வேணும்னா இதை பயன்படுத்திக்குங்க.’ என்று கறார் உத்தரவு போட்டுவிட்டாராம்.

முதல்வர் இந்தளவுக்கு டென்ஷனாக காரணம், சமீபத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை மையப்படுத்தி அவர் ‘மஞ்சள் பை’இயக்கத்தை அறிமுகப்படுத்தினார். உடனே ‘கருணாநிதி தன் ராசிக்கு ஏற்ற மஞ்சள் சால்வையை போட்டிருந்தார். அது அவரது அரசியலுக்கு கை கொடுத்தது. ஸ்டாலினும் அதையே ஃபாலோ பண்ண துவங்கியுள்ளார்.’ என்று எதிர்கட்சியினர் மட்டுமில்லாது தி.மு.க. கூட்டணியை சேர்ந்த சில கட்சி தலைவர்களே கமெண்ட் அடித்தனர். இது முதல்வரின் காதுகளுக்கு போக, வருத்தப்பட்டார்.

இந்நிலையில் அடையாள அட்டையில் அதிகாரிகள் மஞ்சள் மேனியாவை காட்ட, கடுப்பான முதல்வர் கறார் உத்தரவு போட்டு தடுத்துள்ளார்.