பேருந்து சேவை, ஜவுளி கடைகளுக்கு அனுமதி?... இன்று மாலை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு...!
5வது முறையாக முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 24ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தீவிரமாக உள்ள 11 மாவட்டங்களிலும் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த 11 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன்14ம் தேதியில் இருந்து 21ம் தேதி வரை 4வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 5வது முறையாக முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவையை அனுமதிப்பது, இதேபோல் வழிபாட்டுத் தலங்கள், சிறிய அளவிலான துணிக்கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நூலகங்களை திறக்க அனுமதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.