கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஓ.பி.எஸ். முதலமைச்சராகவும், சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்றனர். இதைதொடர்ந்து கடந்த 5ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர், சசிகலா அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ். தனி அணியை உருவாக்கினார். இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, இரண்டாக பிரிந்துள்ளது.

சசிகலா தரப்பினர், தங்களை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கவர்னரை வலியுறுத்தி வந்தனர். அதே நேரத்தில், அதிமுக எம்எல்ஏக்களை, சசிகலா தரப்பினர் மிரட்டி கடத்தி வைத்துள்ளதாகவும், சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய கூடாது எனவும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதனால், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, பதவி பிரமாணம் நடந்தது. அப்போது, 15 நாட்களுக்குள் தனிப்பெரும்பான்மை காட்ட வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து நேற்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடந்தது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில், எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையில், சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கவர்னரை சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கும்படி வலியுறுத்தினார். பின்னர், மெரினா கடற்கரைக்கு சென்ற அவர், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இரவு விடுவித்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின்போது, தன்னை முதலமைச்சராக ஆட்சி அமைக்க அழைத்ததற்கும், தனிப் பெரும்பான்மையை காட்ட ஒரு வாய்ப்பு அளித்ததற்கும் நன்றி கூறியதாக தெரிகிறது.

இந்த சந்திப்பின் போது அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு ஆகியோர் உடன் இருந்தனர்.