தரையில் படுத்து தூங்கிய முதலமைச்சர் ! குவியும் பாராட்டுகள் !!
கர்நாடகா மாநிலத்தில் கிராம தரிசனம் என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு சென்று குறைகளை கேட்டறிந்து வரும் அம்மமாநில முதலமைச்சர் குமாரசாமி, ஒரு கிராமத்தில் பெட்ஷீட் மட்டும் விரித்து ஒரு நாள் இரவு தூங்கிய சம்பவம் பொது மக்களிடையே பாராட்டுகளை பெற்றுவருகிறது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மதக் சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி முதலமைச்சராக உள்ளார். ஆனால் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குமாரசாமியை தொடர்ந்து மிரட்டி அவரை பணி செய்ய விடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பாஜகவும் குமாரைசாமி அரசை கவிழ்க்க பெரு முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் குமாரசாமி கிராம தரிசனம் என்ற பெயரில் கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து வருகிறார். கிராமங்களுக்குச் செல்லும் அவர், அங்கேயே இரவு தங்கி மக்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் முதலமைச்சர் குமாரசாமி, சந்திரகி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முதல்நாள் இரவே வந்துவிட்டார். அன்றைய தினம் இரவில் அரசு பள்ளியில் ஒரு பெட்ஷிட் மட்டும் விரித்து தரையில் படுத்து தூங்கினார்.
இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டார் ஓட்டல்களில் தங்கி, ஹெலிகாப்டர்களில் விழாவுக்கு வரும் ஆடம்பர முதலமைச்சர்கள் மத்தியில் கர்நாட முதலமைச்சரின் இந்த எளிமையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.