முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வருவதால் விரைவில் வீடு திரும்பும் தேதியை மருத்துவர்கள் அறிவிக்க உள்ளதாக அதிமுக அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளையுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. முதல்வர் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பேல் சென்னைக்கு பல முறை வந்து சிகிச்சை அளித்தார்.

எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர், இடையில் சிங்கப்பூர் மருத்துவர்களும் நேரில் வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.லண்டன் டாக்டர் வழிகாட்டுதலின் பேரில் முதல்வருக்கு எய்ம்ஸ் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்ததன் பேரில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக உடல்நிலை தேறி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி சொன்னதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார். இந்நிலையில் சிகிச்சைகள் முடிந்து முதல்வர் பூரண குணமடைந்து வருவதால் லண்டன் டாக்டர் ரிச்சர்டு மேற்கொண்டு அளிக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்து வழிகாட்டுதலை அளித்துவிட்டு லண்டன் சென்றார்.

இதற்கிடையே குணமடைந்து வரும் முதலமைச்சர் விரைவில் வீடு திரும்ப உள்ளார்.அவர் தீபாவளிக்கு முன்னர் வீடு திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை அப்போலோ மருத்துவமனையில் பேட்டி அளித்த அதிமுக அமைப்புச்செயலாளரும் , செய்திதொடர்பு குழு உறுப்பினருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது. முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வருகிறார். விரைவில் அவர் இல்லம் திரும்ப உள்ளார். அதற்கான தேதியை மருத்துவர்கள் அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று பேட்டி அளித்த அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் முதல்வர் தனக்கான உணவை தானே எடுத்துகொள்கிறார், பூரண உடல் நலம் பெற்று வருகிறார் என தெரிவித்தார்
