‘50 சதவீதம் தள்ளுபடி’... மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு... முதல்வர் பழனிசாமி அதிரடி...!
இந்நிலையில் சென்னை மக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், போக்குவரத்து நேரம், புகையால் ஏற்படும் மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. மக்களிடம் மெட்ரோ ரயில் சேவை அதிக வரவேற்பை பெற்ற போதும், கட்டணம் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.
சென்னையில் தற்போது பல்வேறு வழித்தடப் பகுதிகளில் 54.15 கி.மீ. நீளத்திற்கு பயணிகள் சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-II-க்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 29.6.2015 இல் இருந்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பயணிகள் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை மக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணம் ரூ.70-இல் இருந்து ரூ.50 -ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5 கி.மீட்டர் வரை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுகிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் கட்டணத்தில் இருந்து 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என்றும், இந்த ஆணை இந்த ஆணை பிப்.22ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ சேவை 6ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த சமயத்தில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடைமுறைபடுத்தப்படவுள்ள இந்தக் கட்டணக் குறைப்பை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களது பயணங்களை குறைந்த செலவில், நிறைவாக மேற்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.