ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி குறித்து அனைத்து கட்சி கூட்டம்... மதிமுக, விசிக, நாம் தமிழர், மநீமவிற்கு அழைப்பு இல்லை
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் அந்த விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதிகள், ஆக்சிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு கூறுவது தவறு சரியா? என கேள்வி எழுப்பியதோடு ஆலையை அரசே ஏற்று நடத்தலாம் என்றும் எந்த நிறுவனம் என்பது முக்கியமல்ல, மக்களின் உயிர் தான் முக்கியம் என்றும் கருத்து தெரிவித்தனர். மக்களின் உயிர் ஆபத்தில் இருக்கும் போது ஏன் ஆலையை திறக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர். ஸ்டெர்லைட் ஆலையில் ஏன் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க கூடாது? ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உரிய பதிலை இன்று தமிழக அரசு அளிக்க வேண்டுமெனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பாஜக சார்பில் எல்.முருகன், கே.டி.ராகவன், மார்க்சிஸ்ட் சார்பில் பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், வீரபாண்டியன், காங்கிரஸ் சார்பில் கே.வி.தங்கபாலு, ஜெயக்குமார், பாமக சார்பில் மாநில துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடக்கம் முதல் போராடிவரும் மதிமுக, விசிக, நாம் தமிழர், மற்றும் மநீம ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.