ஜெயா டிவி யாரிடம் செல்லக் கூடாதுன்னு ஜெ நினச்சாரோ அவர்களிடமே சென்று விட்டது !! எடப்பாடி பழனிசாமி வேதனை !!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கஷ்டப்பட்டு உருவாக்கிய ஜெயா டிவி, யாரிடம் சென்றுவிடக் கூடாது என ஜெயலலிதா நினைத்தாரோ தற்போது அவர்களிடமே சென்றுவிட்டது என நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடக்கவிழாவில் வேதனை தெரிவித்தார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டிவி இருந்தது. ஆனால் அக்கட்சி உடைந்த பிறகு சசிகலா கைவசம் ஜெயா டிவி சென்றுவிட்டது. இதையடுத்து ஜெயா டிவிக்கு க்கு போட்டியாக தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான 'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டது.
இதற்கான லோகோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்து வைத்தனர். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் நியூஸ் ஜெ தொடங்கப்பட்டது. விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது , இந்த அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பாலமாக இந்தத் தொலைக்காட்சி அமையும் என்றார்.
எல்லா கட்சிகளுமே தொலைக்காட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், தமிழகத்திலே அரசு மேற்கொள்ளும் திட்டங்களை முழுமையாக மக்களுக்கு கொண்டு செல்லவில்லை. நியூஸ்-ஜெ தொலைக்காட்சி அதை முழுமையாக கொண்டு செல்லும் என எடப்பாடி கூறினார்..
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஒரு தொலைக்காட்சியை உருவாக்கினார். ஆனால், இன்று அந்தத் தொலைக்காட்சி யாரிடம் செல்லக்கூடாது என்று ஜெயலலிதா நினைத்தாரோ அவர்களிடத்திலே சென்று விட்டது என வேதனை தெரிவித்தார்.. இந்த அரசின் திட்டங்கள், அ.தி.மு.க.வின் பொதுக்கூட்டங்கள் எல்லாம் நியூஸ்-ஜெ தொலைக்காட்சி மூலமாக வெளிவர இருக்கிறது என குறிப்பிட்டார்..
எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஒரு சிறு பிரச்சினையைச் சொன்னாலே அதை நாள் முழுவதும் மாற்றி, மாற்றி காட்டிக் கொண்டிருப்பார்கள். நாம் மக்களுக்கு செய்யும் நன்மைகளை மக்களிடத்திலே சேர்ப்பது கடினம் உடனறு அவர் கூறினார்..
அனைத்து ஊடகங்களும் இனிமேல் அரசு மேற்கொள்ளும் நல்ல பல திட்டங்களை பாலமாக இருந்து மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.