CITU Soundararajan Condemned

போக்குவரத்து ஊழியர்களின் நியாயத்தை கேட்காமல் நோட்டீஸ் தருவது ஒருதலைபட்சமானது சிஐடியுவின் சவுந்தரராஜன் கூறியுள்ளார். மேலும், ஊழியர்களின் 7 ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவழித்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தை குறைந்தபட்சம் ரூ.20,700 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டன. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க அரசு முன்வரவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. 

இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தனியார் ஓட்டுனர்களை வைத்து பேருந்தை இயக்க அரசு மும்முரம் காட்டி வருகின்றது. 

இதைதொடர்ந்து போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஊழியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றார் சஸ்பெண்ட், டிஸ்மிஸ் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த எச்சரிக்கை குறித்து சிஐடியு சவுந்தரராஜன், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் இந்த வழக்கு குறித்து இரு தரப்பு வாதங்களைக் கேட்டுவிட்டு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார். எங்கள் தரப்பு வாதத்தை தெரிவிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். ஊழியர்களின் பணம் 7 ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவழித்து விட்டதாகவும் சவுந்தரராஜன் தமிழக அரசு மீது குற்றம் சாட்டினார்.