மொய்த்தா உள்பட பலர் வழக்கு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்,

குடியுரிமை சட்டத்திருத்தம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து சட்டமாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களான அசாம் , திரபுராவில் கடந்த இரு நாட்களுக்கும் மேலாக வன்முறை வெடித்துள்ளது. ஏராளமான ராணுவத்தினரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

குடியுரிமைத் சட்டத்தை எதிர்த்து ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த சூழலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா சார்பில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

அவரின் வழக்கறிஞர் இன்றே விசாரணை எடுக்க வேண்டும் அல்லது 16-ம் தேதிவிசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரினார். அதற்கு நீதிபதிகள் பட்டியலிடும் அதிகாரிகளை அணுகுங்கள் என்று தெரிவித்தனர்.

இது தவிர அனைத்து இந்திய அசாம் மாணவர்கள் அமைப்பு(ஏஏஎஸ்யு), பீஸ் பார்ட்டி, தொண்டு நிறுவனமான ரிஹாய் மாஞ்ச் அன்ட் சிட்டிஸன்ஸ் அகைன்ட் ஹேட் , வழக்கறிஞர் எம்.எல் சர்மா, சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்த சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளனர்