பெற்றோர் கண் எதிரில் துடிதுடித்து இறந்த பிள்ளைகள்.. உடற்கூறு பரிசோதணைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என கதறல்.
புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி அக்கா, தம்பி உயிரிழந்துள்ளனர். வீடு விரிவாக்கப் பணி நடைபெற்ற நிலையில் பாதையில் இருந்த சென்ட்ரிங் கம்பியை அப்புறப்படுத்தும் போது மின் கம்பியில் சென்ட்ரிங் கம்பி பட்டு மின்சாரம் தாக்கி இருவரும் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி அக்கா, தம்பி உயிரிழந்துள்ளனர். வீடு விரிவாக்கப் பணி நடைபெற்ற நிலையில் பாதையில் இருந்த சென்ட்ரிங் கம்பியை அப்புறப்படுத்தும் போது மின் கம்பியில் சென்ட்ரிங் கம்பி பட்டு மின்சாரம் தாக்கி இருவரும் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட அய்யனார்புரம் மூன்றாம் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கோப்பெருந்தேவி. இவர்களுக்கு கவிதா (எ) பார்கவி (23) என்ற மகளும் தமிழரசன் (20) என்ற மகனும் உள்ளனர். பார்கவி பொறியியல் படிப்பை முடித்த நிலையில் தமிழரசன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்றுள்ளார்.
இந்நிலையில் இவர்களது வீடு புதுப்பித்து விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று பணி முடிவடையும் தருவாயில் உள்ளது, இவர்கள் செல்லும் பாதையில் இடையூறாக இருந்த சென்ட்ரிங் கம்பியை நேற்று இரவு பார்கவி அப்புறப்படுத்த முயன்றபோது கம்பிக்கு மேலே சென்றுகொண்டிருந்த மின் கம்பி மீது பட்டு அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதால் அவர் அலறியுள்ளார். இதனையடுத்து அக்காவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் பார்கவியின் தம்பி தமிழரசன் முயன்றுள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. அதில் இருவரையும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதன் பின்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பாஸ்கர் வீட்டு முன்பு குவிந்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கணேஷ் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இருவரின் உடலையும் உடற்கூறு ஆய்வுக்கு எடுத்து செல்ல கூடாது எனக்கூறி பார்கவி தமிழரசனின் பெற்றோர்கள் கதறி அழுதனர். பின்னர் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு இருவரின் உடலையும் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் எடுத்துச் சென்றனர். மின்சாரம் தாக்கி அக்கா தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.