நிதி ஆயோக் கூட்டத்துக்கு போன இடத்தில், கூடி பேசிய 4 மாநில முதல்வர்கள்!! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு
நிதி ஆயோக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற முதல்வர்களில் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட முதல்வர்கள் ஆலோசனை நடத்தியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
பிரதமர் தலைமையில் மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக மாநில முதல்வர்கள் டெல்லி சென்றுள்ளனர். தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று மாலை டெல்லி சென்றார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகிய 4 முதல்வர்களும் நேற்று ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பாஜகவிற்கும் மத்திய பாஜக அரசிற்கும் எதிராக செயல்பட்டுவரும் நான்கு மாநில முதல்வர்களும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது அணியை முன்னெடுக்கும் முயற்சிகளும் அதுதொடர்பான பேச்சுகளும் நடைபெறுவதாக தெரிகிறது.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், குமாரசாமி ஆகிய நான்கு தலைவர்களும் இணைந்து ஆலோசனை நடத்தியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மஜத தலைவரும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி, இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.