துபாய் முடித்த கையோடு பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்.. செம்ம அதிரடி.
ஏப்ரல் 2ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுக்கிறார். மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி உதவி கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரிடம் மனு அளிக்க உள்ளார்.
துபாய் பயணத்தை முடிக்கும் கையோடு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி விரைகிறார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகிறது. வரும் 31 ஆம் தேதி மாலை பிரதமர் மோடியை அவர் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக அதிமுகவுக்கு இடையேயான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் பாஜக மாநிலத் தலைவர்கள் திமுக அரசையும் முதல்வர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் கொடுக்கபட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை, சட்ட ஒழுங்கு சரியில்லை என்ற விமர்சனங்களை தீவிரமாக முன் வைத்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். அதேபோல் தமிழக முதலமைச்சரின் துபாய் பயணத்தையும் அவர் மிக மோசமாக விமர்சித்துள்ளார். அதற்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் இல்லை என்றால் அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படும் என அதிமுக சார்பில் எச்சரிக்கப்பட்டது. அதேபோல அண்ணாமலைக்கு எதிராக 100 கோடி அபராத தொகை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுகவின் இந்த வழக்கை சந்திக்க தயார் என அண்ணாமலையும் தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக தலைமை அலுவலகம் ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
அதற்கு தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை அதிகாலை சென்னை திரும்பவுள்ளார் அதைத்தொடர்ந்து அவர் 31 ஆம் தேதி டெல்லி செல்கிறார். அன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கும் அவர் ஏப்ரல் 2ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுக்கிறார். மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி உதவி கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரிடம் மனு அளிக்க உள்ளார்.
அதேபோல 31 ஆம் தேதி இரவு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரையும் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். ஏப்ரல் 1ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்களுயும் சந்திக்க உள்ளார். துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.