திமுக அரசுக்கும், பாஜகவிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படுகிறது. 

தமிழக சட்டப்பேரவை- அரசினர் தீர்மானம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு நேற்று முன் தினம் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளிக்கவுள்ளார். இதனிடையே சட்டப்பேரவையில் இரண்டு அரசினர் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. முதலாவது தீர்மானத்தில், 2026 - ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது. மேலும் தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 

தொகுதி மறு சீரமைப்பிற்கு எதிர்ப்பு

1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக தெரிவிக்கப்படவுள்ளது. மற்றொரு தீர்மானத்தில், 'ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும், 'ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

இதையும் படியுங்கள்

நிதி நிலை சரியில்லை! அரசு ஊழியர்கள் போராட்டத்தை கை விட்டுட்டு! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! நிதி அமைச்சர்.!