chief minister palanisamy letter to prime minister modi

சர்க்கரை இருப்பு வைக்கும் கட்டுப்பாட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தில், கரும்பு சாகுபடி மற்றும் சர்க்கரை ஆலைகளை ஊக்குவிக்க மத்திய அரசு வெளியிட்டுள்ள நிதி ஒதுக்கீட்டு அறிவிப்பால், தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. எனவே, தமிழ்நாட்டில் சர்க்கரை தொழிலை காப்பாற்றும் வகையில், போதிய அளவு நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, கரும்பு உற்பத்தி மற்றும் அது சார்ந்த தொழில்கள் எதிர்மறையான வளர்ச்சியை கண்டிருப்பதுடன், குறைந்தளவு பயன்பாட்டு திறன் கொண்ட தொழிலாக மாறியிருக்கிறது.

சர்க்கரை விலையை நிலைப்படுத்தும் வகையில் இருப்பு வைப்பதற்கு ஏதுவாக ஒதுக்கப்பட்ட நிதி, சர்க்கரை ஆலைகள் மட்டுமே பயன்பெற உதவும். நியாயமான மற்றும் லாபகரமான விலை கிடைக்கவோ, அதிகப்படியான சர்க்கரை இருப்பு வைப்பதற்கோ உதவுமா என்பது தெளிவாகவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளில் பெரும்பாலானவை தனியார் சர்க்கரை ஆலைகள். அவை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் கரும்புக்கு, நியாயமான மற்றும் லாபகரமான விலையை வழங்குவதற்காக, அதிக வட்டிக்கு கடன்பெற்று நிலுவைத் தொகை வழங்கப்படுகிறது. மேலும், குறைந்த சர்க்கரை உற்பத்தி கொண்ட ஒரு மாநிலத்தில், அதனை இருப்பு வைப்பதற்கான உச்ச வரம்பு, ஆலைகளின் நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்குவதோடு நிலுவை தொகை வழங்குவதையும் பாதிக்கும்.

தமிழ்நாட்டில், ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை தேவை உள்ள நிலையில், வெறும், 5.8 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே சர்க்கரை இருப்புக்கான உச்சவரம்பிலிருந்து தமிழ்நாட்டிற்கு தளர்வு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.