அரசு பேருந்துகளில் திருநங்கைகளுக்கு இலவச பயணம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்...!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அரசாணையை வெளியிட்டதில் இருந்தே பெண்களைப் போல் திருநங்கையர்களும் இலவசமாக பயணிக்க உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகம் வந்த முதல் நாளே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணம் ரூ.4000 வழங்கப்படும், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும், அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை 100 நாள்களில் நிறைவேற்றும் திட்டம் ஆகியவற்றிற்கு கையெழுத்திட்டுள்ளார்.
மகளிருக்கு நகர கட்டணப் பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அரசாணையையும் நேற்று தமிழக அரசு வெளியிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் இன்று முதல் பயணிக்கலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அரசாணையை வெளியிட்டதில் இருந்தே பெண்களைப் போல் திருநங்கையர்களும் இலவசமாக பயணிக்க உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். சமூக வலைத்தளங்கள் மூலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். இ‘மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது கருணாநிதி காலந்தொட்டே தி.மு.க அரசின் வழக்கம். அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.