கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரை சந்தித்து விளக்குகிறார்..!
சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இந்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம் அளிக்க இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டம் ஆடியது. இதனை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தற்போது தமிழகத்தில் உள்ள ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கவுள்ளார். முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் தனி செயலாளர் உதயச்சந்திரன், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆளுநரை சந்திக்கின்றனர்.
மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இந்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 13-ம் தேதி முதல்வர் ஆளுநரை சந்தித்த போது கொரோனா நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்தார். கொரோனாவிற்கு தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.