முதலமைச்சரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் எங்காவது தவறுகள் நடைபெற்றால் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், கருப்பு பூஞ்சை மற்றும் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் குறித்து மக்கள் அச்சத்தில் ஆழ்த்துள்ளனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும், கருப்பு பூஞ்சை மற்றும் டெல்டா பிளஸ் வைரஸை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியில் மக்கள் ஆர்வமாக பங்கேற்கின்றனர். 1.38 கோடி தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது. இதுவரை 128 கோடியே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மலை வாழ் மக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இன்னும் 10 நாட்களில் தடுப்பூசி போடப்படும்.
கோடியக்கரை, நாகூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை நோக்கை செல்கிறது. 

சுற்றுலாத் தலங்கள், குறைந்த மக்கள் தொகை மாவட்டங்களில் முழுவதும் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 423 பேர் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 1 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. 1059 மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்பட்டது, 32 வயது உடைய செவிலியருக்கு மட்டுமே டெல்டா பிளஸ். இவருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்படவில்லை. டெல்டா பிளஸ் அடுத்தடுத்து தொற்று ஏற்பட்டால் ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் படி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் எனக்கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் எங்காவது தவறுகள் நடைபெற்றால் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. நானும், சுகாதாரத்துறை செயலாளரும் பல ஊர்களுக்குச் சென்று, அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளோம். சம்பந்தப்பட்ட பயனாளிகளை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டதா?, இல்லை ஏதேனும் பணம் கட்டினார்களா? என விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார். அந்த வகையில் இதுவரை 40 தனியார் மருத்துவமனைகள் மீது ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.