"தகுதிக்கு மீறி ஆசைப்படக்கூடாது" - எடப்பாடி பழனிசாமி விளாசல்...
வாய்ஜாலம் காட்டுபவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்களுக்கு ஆமைக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றது. அதைதொடர்ந்து இன்று வேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாய்ஜாலம் காட்டுபவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்களுக்கு ஆமைக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், குடிமராமத்து திட்டத்தின் மூலம் 34 ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து தற்போதுவரை ரூ 10540 கோடி மதிப்பீட்டில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20,544 வீடுகள் கட்டப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு பேச்சை குறைத்துக்கொண்டு, செயலில் தீவிரம் காட்டுவதாகவும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களையும் சென்றடைந்துள்ளதாகவும் எடப்பாடி பழனி சாமி பேசினார்.