இன்று மதியம் 1.15 மணி அளவில் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நடத்தும் அலுவலரான தனலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார். 

சட்டமன்ற தேர்தலுக்கான முதற்படியாக வேட்புமனு தாக்கல் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நாளே போடி தொகுதியில் போட்டியிட தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு அடுத்து இரு தினங்கள் விடுமுறை என்பதால் முதல் நாளில் மட்டும் 70 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் என பலரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். சென்னை அயனாவரத்தில் உள்ள 6வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். 9வது முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 3வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் திங்கட்கிழமை மதியம் எடப்பாடி சென்றடைந்தார். அங்கு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த எடப்பாடியாருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று மதியம் 1.15 மணி அளவில் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நடத்தும் அலுவலரான தனலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அங்கிருந்து ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார்.