அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து... அமைச்சர்களுக்கு ரகசிய உத்தரவு போட்ட முதல்வர் எடப்பாடி..!
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அமைச்சர்களை சென்னையில் இருக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அமைச்சர்களை சென்னையில் இருக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் 28ம் தேதி நடந்த அக்கட்சியின் செயற்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் 5 மணிநேரம் நடைபெற்ற ஆலோசனையில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எந்த முடிவு எடுக்கப்படவில்லை. இதனையடுத்து அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
பின்னர், முதல்வர் பங்குபெறும் நிகழ்ச்சிகளை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். ஆனால், நேற்று முன்தினம் காந்தி பிறந்தநாள் நிகழ்வில் மட்டும் கலந்துகொண்டார். ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துப் பேசவில்லை. இதனைத் தொடர்ந்து சொந்த ஊரான பெரியகுளத்துக்குப் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வருகிற 6ம் தேதி சென்னை வர வேண்டும் என்று கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில் நேற்று முன்தினம் தகவல் வெளியானது. பின்னர் திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், அந்த பதிவு நீக்கப்பட்டு விட்டது. இதனால் அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நீடித்தது. இந்தத் தகவல் வெறும் வதந்திதான் என அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் விளக்கமளித்தனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அனைத்து அமைச்சர்களும் வருகிற 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.