ஆயிரம் டிடிவி வந்தாலும்...! பதிலடி கொடுத்த எடப்பாடி...!
அதிமுக மீது வீண் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்ச்சிக்கிறார்கள் எனவும் ஆயிரம் டிடிவி தினகரன் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். வாழ்வா சாவா போட்டியில் அதிமுகவை வீழ்த்தி அரசியல் இருப்பை உறுதி செய்துள்ளார் தினகரன்.
அதிமுக அரசு, மத்திய பாஜக அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் பல்வேறு நெருக்கடிகளையும் மீறி அபார வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரும் அமைச்சர்கள் சிலரும் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று உறுதிமொழி ஏற்று எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் உண்மையான அதிமுகவினர் யார் பக்கம் இருக்கிறார்கள் என தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தெரியும் எனவும் ஐந்தாறு பேர் சுயநலத்திற்காக செயல்படுவதை விட்டுவிட்டு உண்மையை உணர்ந்து நடவடிக்கையில் ஈடுபடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
துரோகம் செய்தவர்கள் தயவு செய்து நினைத்து பாருங்கள் எனவும் நிர்வாகிகளை நீக்கவேண்டி இருந்தால் ஒன்றரை கோடி பேரையும் நீக்க வேண்டி இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
என்ன செய்வதென்றே தெரியாமல் ஆட்சியாளர்கள் பயத்தில் இருக்கிறார்கள் எனவும் சின்னமும் கட்சியும் மட்டும் இருந்தால் போதாது எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மீது வீண் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்ச்சிக்கிறார்கள் எனவும் ஆயிரம் டிடிவி தினகரன் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது எனவும் சவால் விடுத்தார்.