Chief Minister consulted with ministers
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் தற்போது திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக அரசியல் நிலவரம் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும் அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனு கொடுத்தது தொடர்பாக செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அடிக்கும்படி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ. ஜக்கையன், முதலமைச்சருக்கு எதிராக மனு கொடுத்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறியிருந்தார். இந்த நிலையில், சபாநயாகர் அளித்த காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்காததால், 18 எம்.எல்.ஏ.க்களையும் கட்சி தாவல் தடைச்சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அதிமுகவில் இருந்து விலகாமலும், வேறு கட்சியிலும் சேராத நிலையில், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
18 எம்.எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தை நாடியுள்ள இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் சி.வி. சண்முகம், தங்கமணி, வேலுமணி ஆகியோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
