தொடரும் போலீஸ் தற்கொலைகள்….. தூக்கில் தொங்கிய கொருக்குப் பேட்டை எஸ்.ஐ. !!
சென்னை தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்த ஜோசப் என்ற உதவி ஆய்வாளர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்த கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜோசப் . 55 வயதான இவர் கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து கொருக்குப்பேட்டை காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.
மூத்த மகள் அனிதா பெறோர் எதிர்ப்பையும் மீறி கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இளைய மகன் ஜென்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஜோசப் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். அவரை மனைவி மற்றும் மகள்கள் தேடி வந்தனர். மேலும் காவல் நிலையத்திலும் இது குறிம்மு புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்நிலையம் பின்புறம் கருவாடு காயவைக்கும் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி பிரோத பரசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த உடல் யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அது சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோசப் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குடும்ப பிரச்னையில் ஜோசப் தற்கொலை செய்தாரா, உயர் அதிகாரிகளின் டார்ச்சரா, வேறு காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் தற்கொலை செய்தார்.
இதையடுத்து அயனாவரம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தார். தற்போது எஸ்எஸ்ஐ ஜோசம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். போலீசாரின் இந்த தொடர் கொலைகள் அவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.