அதிமுக அலுவலகத்திற்கு வைத்த சீலை அகற்றக்கோரிய ஈபிஎஸ்-ஒபிஎஸ் ஆகிய இருவரின் வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அதிமுக அலுவலகத்திற்கு வைத்த சீலை அகற்றக்கோரிய ஈபிஎஸ்-ஒபிஎஸ் ஆகிய இருவரின் வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11 ஆம் தேதி நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார். இதை அடுத்து கட்சி அலுவலத்திற்கு வைத்த சீலை ரத்து செய்யக் கோரியும், இந்த உத்தரவுக்கு தடை விதித்து, கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க கோரியும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த மனுவில், பொதுக்குழுவின் போது கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கூறி பாதுகாப்பு கோரி கட்சியின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், பன்னீர்செல்வம் தனது ஆட்களுடன் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த கோப்புகளை எடுத்துச் சென்றுள்ளார் என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: பொன்னையன், SP வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு.. பொது.செ ஆனவுடன் EPS அதிரடி .

இதுசம்பந்தமாக புகார் அளித்தும், காவல் துறையினர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிமுகவினர் 14 பேரை கைது செய்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். சொத்து உரிமை தொடர்பாக பிரச்னை இருந்தால் மட்டுமே சீல் வைப்பதற்கான சட்டப்பிரிவுகளை அமல்படுத்த முடியும் எனவும், அதிமுக தலைமை அலுவலகத்தை பொறுத்தவரை, சொத்து உரிமை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை எனவும், கட்சியின் தலைமை நிலைய செயலாளர், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்தின் உரிமை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த போது கட்சி அலுவலகத்தை சீல் வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் தனது மனுவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி ஓ.பன்னீர்செல்வமும், சீல் வைத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவில் எதிர்மனுதாரராக எடப்பாடி பழனிச்சாமியை இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பொன்னையன் ஆடியோ போல் விரைவில் பல ஆடியோக்கள் வெளிவரும்..! எடப்பாடி பழனிசாமியை அலற வைத்த புகழேந்தி

பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், எடப்பாடி பழனிச்சாமி, தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டது உரிமையியல் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது எனவும், இதுநாள் வரை எந்த நீதிமன்றமும் தன்னை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றோ, எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் என்றோ அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சி தலைமை அலுவலகத்துக்குள் நுழைய தனக்கு எல்லா சட்டப்பூர்வ உரிமைகளும் உள்ளதாகவும், கட்சி தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட போது அது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தின் உரிமை தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது என்பது தொடர்பானன எந்த ஆதாரங்களும் இல்லாமல், முறையாக விசாரணை நடத்தாமல் சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டுமெனக் மனுவில் கோரியுள்ளார். இந்த இரு வழக்குகலும் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.