திமுக தொண்டரை அரை நிர்வாணமாக தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

திமுக தொண்டரை அரை நிர்வாணமாக தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

பிப்ரவரி 19-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20-ம் தேதி ஜெயக்குமார் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "என்மீது புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. எனவே, என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தது தவறானது. நரேஷ்குமாரின் மருத்துவ அறிக்கையைிலும் அவருக்கு காயங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்நிலையில், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காயமடைந்ததாக கூறப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கடும் நிபந்தனையுடன் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் போலீஸில் இரு வாரங்கள் புதன், வெள்ளிகிழமைகளில் ஆஜராகி கைதெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.