Chennai Floods | ஜெயக்குமார் அண்ணன் தான் சாப்பாடு போடுறார்...! திமுக காரங்க எட்டிக் கூட பாக்கல வைரல் வீடியோ
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திமுக அரசு கூறிவரும் நிலையில், இந்த வைரல் வீடியோவில் மக்கள் அரசை கடுமையாகக் குறை கூறுகின்றனர்.
சென்னையின் பல பகுதிகளும் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6 நாட்களாக தினமும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று சேதங்களைப் பார்வையிட்டு, நிவாரண உதவிகள் மற்றும் உணவு வழங்குதல், சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதே போல அமைச்சர்களும் களத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள். இவை குறித்த செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் பெருமளவில் பகிரப்படுகின்றன. அதேபோல, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினரும் களத்திற்கு வந்து பணியாற்றுகின்றனர்.
ஆனால், கடும் வெள்ள நேரத்தில் தங்களுக்கு அரசும் திமுகவினரும் எதுவுமே செய்யவில்லை என்று மக்கள் பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சென்னை மழை வெள்ளத்தில் வட சென்னை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பலரும் களப்பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும், ராயபுரம் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏவாக இருந்தவருமான டி.ஜெயகுமார் மழை தொடங்கிய நாள் முதலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது வைரலாகியுள்ள வீடியோவில், ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் வடசென்னை மக்கள், தங்களுக்கு இந்த கடும் வெள்ள காலத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தான் மூன்று வேளையும் உணவளித்து வருகிறார் என்றும், திமுகவினர் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை என்றும் கூறுகின்றனர். எங்கள் பகுதி திமுகவினர், பொறுப்பில் இருக்கும் திமுக வட்ட செயலாளர் என்று யாருமே எங்களை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர். பெயருக்கு உணவளிக்கிறோம் என்று வரும் திமுகவினர் கூட சரியான உணவைத் தராமல், ”பசி இருப்பவர்கள் சாப்பிடுங்க.. பசி இல்லாதவங்க சாப்பிடாதீங்க”, என்று சொல்லிவிட்டு போனதாக குற்றம்சாட்டுகின்றனர் மக்கள். இவர்களுக்கு ஓட்டு போட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை என்றும் கூறுகின்றனர்.
வெள்ள காலத்தில் மக்களுக்கு அனைத்து விதங்களிலும் உதவிகள் தரப்படுவதாக திமுகவினர் கூறும் நிலையில், இந்த வீடியோவில் திமுகவினர் எட்டிக்கூட பார்க்கவில்லை, இவர்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று கூறுவது வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமாருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.