நிலவேம்பு விநியோகத்துக்கு எதிரான கருத்து: கமலை விசாரிக்கின்றனர் போலீஸார்
நிலவேம்பு குறித்து பொது மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனை விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
நில வேம்பு தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன்,
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்...
ஆராய்ச்சி அலோபதியார் தான் செய்ய வேண்டுமென்றில்லை பாரம்பரியக் காவலர்களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான் - என்று இரண்டு டிவீட்களாக தனது கருத்தை வெளிப்படுத்தினார் கமல்ஹாசன்.
கமலின் அரசியல் கருத்துக்கு சமூகத் தளங்களிலும், ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. கமல் மற்ற எதிலும் அரசியல் செய்யட்டும், ஆனால் இது எத்தனையோ பேரில் உயிருடன் சம்பந்தப்பட்டது என்று சித்த மருத்துவர்கள் தெள்ளத் தெளிவாக நில வேம்பு குறித்த பின்னணியைக் கூறினர்.
இதனால் கலக்கமடைந்த கமல், தன் கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்து ஓர் அறிக்கையும் வெளியிட்டார்.
அதில்,
நிலவேம்பு குடிநீரை நம் நற்பனி இயக்கத்தினர் விநியோகிக்க வேண்டாம் என்று தான் கூறினேன். நிலவேம்புக்கு கமல் எதிர்ப்பு என்று செய்தி பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை. மருந்தை அளவில்லாமல் கொடுப்பதை தவிர்க்கவே டுவிட்டரில் கருத்து வெளியிட்டேன். மருத்துவர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை விநியோகிக்க வேண்டாம் என கூறினேன். சித்தா, அலோபதி என்ற தனிச்சார்பு எதுவும் எனக்கு இல்லை. மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். - என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர், நிலவேம்புக் குடிநீர் குறித்து கமல் தவறான தகவல்களைப் பரப்புவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். அவரது புகாரில் முகாந்திரம் இருப்பதாக போலீஸார் கருதியதால், இதனை விசாரிக்க முடிவு செய்தனர். ஆனால், அவர் டிவிட்டர் பக்கத்தில் இந்தக் கருத்தை தெரிவித்ததால், இதனை சைபர் க்ரைம் போலீஸார் விசாரிக்க வேண்டும் என்று கருதி, சைபர் கிரைம் பிரிவுக்கு இதனை மாற்றியுள்ளனர். எனவே, கமல்ஹாசனிடம் அவரது டிவிட்டர் கருத்துகள் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விரைவில் விசாரிக்கவுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.