முன்னாள் அமைச்சருக்கு, அவரது உதவியாளர்கள் மூலம் கோவை மாநகராட்சி ஆட்டத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறது.  

கடந்த இரு தினங்களுக்கு முன் கோவை மாநகராட்சியில் ரெகுலர் பணிக்கு வராமல் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நேர்முக உதவியாளராக இருந்தவர் சரவணன். இவர், கோவை மாநகராட்சியில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர், அமைச்சரின் சென்னை அலுவலகத்தில் முகாமிட்டு, பணியாற்றி வந்தார். தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அமைச்சரின் நேர்முக உதவியாளர் பணி முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் இவர், கோவை மாநகராட்சியின் ரெகுலர் பணிக்கு வரவில்லை. சென்னையிலேயே முகாமிட்டு, வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அத்துடன், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, இவரிடமிருந்து பறக்கும் படை அதிகாரிகள் 18 லட்சம் பறிமுதல் செய்தனர். 

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையம் கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்திற்கும் பதில் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இவரை சஸ்பெண்ட் செய்து, கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இந்த தகவல், தேர்தல் ஆணையத்திற்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அடுத்த அதிரடியாக எஸ்.பி.வேலுமணிக்கு உதவியாளராக இருந்த பார்த்திபன் என்பவரின் விருப்ப ஓய்வு மனுவையும் கோவை மாநகராட்சி நிராகரித்துள்ளது. உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு உதவியாளராக கோவை மாநகராட்சி சார்பில் உதவி பொறியாளராக பார்த்திபன் நியமிக்கப்பட்டு இருந்தார். இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் உதவியாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

 உள்ளாட்சி துறை உதவியாளராக இருந்த போது பார்த்திபன் பல தில்லுமுல்லுகளை செய்துள்ளார். நேர்மையான பல அதிகாரிகளை பந்தாடியவர். பதவியில் இருந்தபோது இவரை விட உயர்ந்த அதிகாரிகளும் இவரை கண்டதும் எழுந்து நிற்பார்கள். நகராட்சி ,பேரூராட்சிகளில் பலர் ஊழல் திலகங்களானது இந்த பார்த்திபனால்தான் என்கிறார்கள். சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகோபால் விவகாரம் என்னவாகுமோ என நொந்து கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சருக்கு, அவரது உதவியாளர்கள் மூலம் கோவை மாநகராட்சி ஆட்டத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறது.