தமிழக அரசியலில் அனைத்து இயக்கங்களும், ஜெயலலிதா என்ற பிம்பத்தை வைத்து பார்க்கப்பட்டது. 1960 களில் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலக்கட்டங்களில் , அவருடைய எளிமை பரவலாக பேசப்பட்டது.கண்டிப்பான அரசியல் வாதியாக இருந்தாலும், ஆட்சியை பக்தவச்சலத்திற்கு விட்டு கொடுத்ததால், அதன் பிறகு அவரால், அரசியலில் சோபிக்க முடியவில்லை.
அண்ணா / கருணாநிதி :
அதன் பிறகு, மெத்த படித்தவர், எளிமையானவர் என்று பெயரெடுத்த அண்ணா , ஆட்சிக்கு வந்தாலும், ஓரிரண்டு வருடங்களில், இயற்கை அவரை பறித்து சென்றது.அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற கருணாநிதி, அதிகம் படிக்காதவர் என்றாலும், ஆட்சி நிர்வாகத்தில் பெயர் பெற்றவர். ஆனால் தனது குடும்பம் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக , எம்ஜிஆர் எனும் மிகப்பெரிய சக்தியை அவரே உருவாக்கும் சூழ்நிலை உருவானது.

எம் ஜி ஆர் :
அதிமுக எனும் பேரியக்கத்தை, ஆரம்பித்த எம்ஜிஆர் ஆட்சியை பிடித்து முதல்வரானார். மனிதநேயம் மிக்கவர் என்ற பெயர் எடுத்த எம்ஜிஆர், கண்டிப்புக்கு பெயர் போனவர் என்ற பெயரை எடுக்க முடியவில்லை.
1982 இல், எம்ஜிஆரால் , அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட , ஜெயலலிதா தன்னுடைய தனித்துவத்தால், அனைவரையும் பின்னுக்கு தள்ளினார். கருணாநிதியை சமாளிக்க சரியான ஆள் என்று, எம்ஜிஆரால், முன்னிறுத்தப்பட்டார் ஜெயலலிதா.

ஜெயலலிதா :
ஜெயலலிதா வருகைக்கு பின்னர், தமிழக அரசியலின் வடிவமே மாறிப் போனது. அனைத்தும் ஜெயலலிதா மயமாகி போனது. வீழ்ந்தாலும் வென்றாலும் அதில் தன்னுடைய தனித்துவத்தை எப்போதுமே , ஜெயலலிதா விட்டுக்கொடுத்தது இல்லை.
ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இதுவரை இருந்த முதல்வர்களில் வித்தியாசமான , முதல்வரை தமிழக அரசியல் கண்டது .கடைக்கோடி பஞ்சாயத்து பியூனிலிருந்து - தலைமை செயலாளர் வரை ஜெயலலிதா என்ற ஒரு மாயை கட்டிப்போட்டது. அதிமுக கட்சியிலும், அனைத்துமே ஜெயலலிதாவை மையப் புள்ளியாக வைத்தே இயங்கியது.
அரசியல் கட்சிகளில், எதிர் கட்சிகள் “எதிரி கட்சிகளாக” மாறி போனதும் , அப்பாவின் இனிஷியலையே மகன் அழித்த வரலாறும்,அவருடைய காலத்தில் தான் நடந்தது.

சொந்த சகோதரர்கள், வேறு வேறு கட்சியில் இருந்தால், அவர்கள் வீட்டு சுபநிகழ்சிகளில் கூட கலந்துக் கொள்ள முடியாது. இப்படிப்பட்ட அனைத்துமே ஜெயலலிதா என்றிருந்த தமிழக அரசியலில் டிசம்பர் 5 பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், ஜெயலலிதா இருந்த இடத்தில், யாரையும் எற்றுக்கொள்ளாத தமிழக மக்கள், கட்சி தொண்டர்கள் , ஜெயலலிதாவின் விசுவாசம் மிக்க தொண்டரான ஒபிஎஸ் - ஐ மட்டும் ஏற்றுக் கொண்டார்கள்.
மிக பிரமாண்டமான, அனைத்திலும், அனைத்துமாக ஆதிக்கம் உள்ள முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் இடத்தில், மிக பணிவாக அமர்ந்தார் ஒபிஎஸ். ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர், தமிழக முதல்வர்களில், எளிமையான ஒரு முதல்வரை மக்கள் பார்த்தார்கள் .
ஒ பி எஸ் / ஸ்டாலின் :
முதல் நாள், ஜல்லிக்கட்டு விவகாரத்தில், மேடைப்போட்டு ஒபிஎஸ் – ஐ, திட்டிய இயக்குனர் கௌதமனுக்கும் அனுமதி, வறட்சி பற்றி விமர்சனம் செய்த கம்யூனிஸ்ட் பால கிருஷ்ணனுக்கும் அனுமதி, திருச்சியில் காவல் பணியில் கலக்கிய , அதிகாரியுடன் கை குழுக்கல், 12 வருஷத்துக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி பூ போல், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் நிகழ்வு சாதாரணமான நடைமுறையானது, என தினம் தினம் அசத்தினர் ஒபிஎஸ்..!

ஒ பி எஸ் :
தண்ணீர் பிரச்சனைக்காக , ஆந்திர முதல்வரை சந்தித்ததும், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரிகளை முதல்வரே நேரில் பார்த்ததும் எல்லோராலும் வியப்பாக பார்க்கப்பட்டது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய பொறுப்பில், எளிமையான அரசியல் வாதியாக, வலம் வரும் ஒபிஎஸ் நிர்வாகத்தில், தன்னுடைய தலைவியின் பாணியை கடைப்பிடிப்பதாக அதிகாரிகள் மட்டத்தில், பேச்சு உலாவுகிறது.

ஒரு பைலும், அவருடைய மேசையில் தங்குவதில்லை. எந்த பிரச்சனையாக இருந்தாலும், துறை செயலாளர்களை அழைத்து, YES (Or) NO என்ற பாணியில், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக விவரங்களை கேட்டு முடிவுகளை எடுக்கிறாராம். இதனால் அதிகாரிகளும், மனம் திறந்து பிரச்சனைகளை சொல்வதால், ஆட்சி பணி மின்னல் வேகத்தில் நடப்பதாக அதிகாரிகளே ஆச்சர்யப்பட்டு சொல்கின்றனர்.

அண்ணாவின் எளிமை , எம்ஜிஆரின் அணுகுமுறை, ஜெயலிதாவின் கண்டிப்பு என ஒபிஎஸ் கலக்கு கலக்கு என கலக்கி வருகிறார் என்பதுதான் தற்போதைய கோட்டை வட்டார பரபரப்பு டாபிக் .......!
