அரசியலில் மோடி எனக்கு ஜூனியர்.. இருந்தும் மரியாதை கொடுத்தேன்.. கெடுத்துகிட்டாரு!! மோடியை கிழித்தெறியும் நாயுடு
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பாஜகவுடனான கூட்டணியை ஆந்திர ஆளுங்கட்சியான தெலுங்குதேசம் முறித்துக்கொண்டது.
சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்துவருகிறார் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு. இந்நிலையில், ஆந்திரா தலைநகர் அமராவதியில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. 5 கோடி மக்களின் நலனை மத்திய அரசு புறக்கணிக்கிறது. வாக்கு தவறிய பிரதமர் மோடி குறித்து நாடறியும் வகையில் ஆந்திரா போராட்டம் நடத்தியுள்ளது.
ஆந்திராவில் பாஜக தனது கட்சியை பலப்படுத்தி கொள்ளவே, நிதி வழங்காமல் ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக இவ்வாறு நடக்கிறது. நிதி வழங்கி, அதுகுறித்து நான் தவறான கணக்குக் காட்டுவதாக பாஜக கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறது. மோடி எனக்கு அரசியலில் ஜூனியர். ஆனாலும், அவர் பிரதமர் என்பதால், சார்..சார்.. என அழைத்தேன். அந்த மரியாதையை அவர் காப்பாற்றிக் கொள்ளவில்லை. அவருடைய குணம் வெளிப்பட்டது. அதனால்தான் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினோம் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.