எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் ஆந்திராவே பத்திக்கிட்டு எரியும் ! ஜெகன் மோகனை எச்சரித்த சந்திரபாபு நாயுடு !
எனக்கு ஏதாவது நடந்தால் ஆந்திராவே பற்றி எரியும் என முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்..
அண்மையில் நடைபெற்ற மக்களவை மற்றும் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் பதவி ஏற்றார்.
இதையடுத்து ஜெகன் ஆந்திராவில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதற்கு பொது மக்களிடமும் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. அவர் பதவி ஏற்ற பிறகு முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வசதிகளை குறைத்தார்.
மேலும் அமராவதி நதிக்கரையில் கட்டப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் வீட்டையும் விதியை மீறி கட்டியதாக கூறி இடித்து தள்ளினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி அரசு எனக்கு உரிய பாதுகாப்பை அளிக்கவில்லை. எனது உயிருக்கு இருக்கும் ஆபத்தை வைத்து ஆளும் கட்சி விளையாடுகிறது. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிந்தும் அரசு பாதுகாப்பை குறைத்துள்ளது என குற்றம்சாட்டினார்.
எனக்கு ஏதாவது நடந்தால் யாரும் அரசைக் கட்டுப்படுத்த முடியாது. ஆந்திர மாநிலம் முழுவதும் பற்றி எரியும். ஆளும் கட்சியினர் தாக்கியதால் பெண் சமூக ஆர்வலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுபற்றி வாய் திறக்க ஜெகன் மறுக்கிறார். கண்டனம் தெரிவிக்கக் கூட அவருக்கு வார்த்தை இல்லை எனவும் ஜெகன் மோகன் ரெட்டியை அவர் விமர்சித்துள்ளார்.=