மோடி ஏன் ஓடி ஒளிகிறார்? உங்களால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள முடியுமா ? சவால் விடும் சந்திர பாபு நாயுடு…
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்பதில் மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என்றும் மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு தொடர்ந்து ஒளிந்து ஓடுவது ஏன் எனவும் சந்திர பாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தால் கூட்டணியில் இருந்து விலகிய அவர், மத்திய அரசுக்கு எதிராக மக்களைவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கூட்டத்தில் வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் சந்திரபாபு நாயுடு பேசினார். அப்போது சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உட்பட, ஆந்திர அரசின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாமல், மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது என குற்றம் சாட்டினார்.
நமது அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். ஆனாலும், மத்திய அரசு, பிடிவாதம் பிடிப்பது, ஆச்சர்யமாக உள்ளது என தெரிவித்தார்.மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு தொடர்ந்து ஒளிந்து ஓடுவது ஏன்? என குற்றம் சாட்டிய அவர் இது அரசியல் தற்கொலைக்கு சமம். என்றார்.