‘அந்த விஷயத்தில் பாஜகவை பார்த்தாலே திமுகவுக்கு பயம்’... ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட ராஜ்நாத் சிங்!
தமிழகம் வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர், நீலகிரியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கான நாட்கள் குறைவாக உள்ளதால் தேர்தல் பிரச்சார களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக, திமுக கட்சி தலைவர்களைத் தொடர்ந்து அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழகம் வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர், நீலகிரியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் போஜராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்றால், மத்தியில் பாஜக அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டு பல்வேறு நலத்திட்டங்களையும், மாநில வளர்ச்சிக்கு உதவ முடியும். திமுகவின் முக்கியத் தலைவர் ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை விமர்சித்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக முதல்வரின் தாயைப் பற்றி விமர்சித்தது தமிழகப் பெண்களை விமர்சிப்பதற்கு ஒப்பாகும் என திமுகவை கடுமையாக சாடினார்.
தளி தொகுதி வேட்பாளர் நாகேஷ்குமாரை ஆதரித்து ஓசூரில் பிரச்சாரம் மேற்கொண்ட ராஜ்நாத் சிங்: திமுக, காங்கிரஸ் கட்சிகள் சாதி, மத ரீதியிலான அரசியலை செய்து வருகிறது. பெண்கள் மீதான பாஜகவின் கண்ணியத்தை பார்த்து திமுக அச்சப்படுகிறது. மோடி ஆட்சியில் 2ஜி, 3ஜி என எந்த ஊழல்களும் நடந்தது கிடையாது, நடக்கப்போவதும் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் முற்றிலுமாக மதுபானத்திற்கு தடை விதிக்கப்படும் எனக்கூறி வாக்கு சேகரித்தார்.