சமாஜ்வாடி எம்.எல்.ஏக்கள் ஜெயில்ல இருக்காங்க.. இல்லைனா பெயில்ல இருக்காங்க.. வெளுத்து வாங்கிய தாகூர்
உத்தரப் பிரதேச மாநிலத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தியாவிலேயே அதிகமான சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மாநிலம். மக்களவைத் தொகுதிகளும் 80 என்பதால் அதிலும் உ.பி.க்கே முதலிடம். அதனாலேயே, உ.பி.யில் அறுதிப் பெரும்பான்மை பெரும் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும். 2024ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜகவுக்கு இந்தத் தேர்தல் ஒரு முன்னோட்டம்.
தற்போது அங்கு நடக்கும் நிகழ்வுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லை. உத்தர பிரதேசத்தில் இதுவரை 3 அமைச்சர்கள் உள்பட 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகியிருக்கின்றனர். இதுதான் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பாஜகவிலிருந்து விலகிய சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தவர்களை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
லக்னோவில் நேற்று பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,’ சமாஜ்வாடியில் சேருபவர்கள் கலவரம் செய்கிறார்கள். பா.ஜ.க.வில் சேருபவர்கள் கலவரக்காரர்களை பிடிக்கிறார்கள். சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் சிறையில் இருக்கிறார்களோ அல்லது ஜாமீனில் இருக்கிறார்களோ அதுதான் அவர்களின் அசல் ஆட்டம். தூய்மையான குணம் கொண்டவர்கள் பா.ஜ.கவில் இணைவதும், ரத்தம் தோய்ந்த கைகளுடன் கலவரக்காரர்கள் பலர் சமாஜ்வாடியில் இணைவதும் தெளிவாக தெரிகிறது.
எம்.எல்.ஏ நஹித் ஹசனை பார்த்தால் அவர் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் நம்பர் 1. அவர் சிறையில் இருக்கிறார். இரண்டாவது எம்.எல்.ஏ. அப்துல்லா ஆசாம் ஜாமீனில் இருக்கிறார். சமாஜ்வாடி வேட்பாளர் பட்டியலை பார்த்தால், ஜெயில் இருப்பவர்களுடன் தொடங்கி பெயில் இருப்பவர்களுடன் முடிவடைகிறது. சிறை-ஜாமீன் விளையாட்டே சமாஜ்வாடி கட்சியின் உண்மையான விளையாட்டு’ என்று கூறியுள்ளார்.