பொருளாதார ரீதியாக தமிழகம் பின்னடைய வேண்டும் என நினைக்கிறதா மத்திய அரசு? பழனிவேல் தியாகராஜன் கேள்வி!!
கலால் வரியை உயர்த்தியபோதோ, கலால் வரிக்கு பதிலாக செஸ் வரியை விதித்தபோதோ மாநிலங்களிடம் ஆலோசிக்காத ஒன்றிய அரசு, இப்போது செஸ் மற்றும் சர்சார்ஜ் வரிகளை குறைக்காமல் மாநிலங்களின் வரியை குறைக்க வேண்டும் என்பது ஏன் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கலால் வரியை உயர்த்தியபோதோ, கலால் வரிக்கு பதிலாக செஸ் வரியை விதித்தபோதோ மாநிலங்களிடம் ஆலோசிக்காத ஒன்றிய அரசு, இப்போது செஸ் மற்றும் சர்சார்ஜ் வரிகளை குறைக்காமல் மாநிலங்களின் வரியை குறைக்க வேண்டும் என்பது ஏன் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அண்மையில் குறைத்த மத்திய அரசு, மாநில அரசுகளும் வரியைக் குறைக்க வேண்டுமென வலியுறுத்தியது. சில மாநிலங்கள் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்வினையாற்றி வருகின்றன. நாட்டிலுள்ள பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையிலேயே இருக்கிறது. தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.60 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.40 ஆயிரம் கோடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இது மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை விட பாதி. மேலும் தமிழகத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம். நாட்டின் பணவீக்கம் 8 சதவீதமாக இருக்கும் நிலையில் தமிழகத்தின் பணவீக்கம் 5 சதவீதம் மட்டுமே உள்ளது. நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லத் தேவையில்லை. எங்களை விட மோசமாக செயல்படும் நபர்களிடமிருந்து எங்களுக்கு கட்டளைகள் தேவையில்லை. அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு செயல்படுபவர்களை நாங்கள் விரும்புவதில்லை. நாங்கள் செய்ய விரும்பாத விஷயங்களைச் செய்யும்படி வற்புறுத்தப்படுகிறோம்.
மத்திய அரசு கோரிக்கை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாக எனக்கு நினைவில் இல்லை. இதையெல்லாம் அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை என்றே நினைக்கிறேன். மாநிலங்கள் தங்களது சொந்த நிதி மேலாண்மையை நிர்வகிக்க அரயலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. கலால் வரியை உயர்த்திய போதும், கலால் வரிக்கு பதில் செஸ் வரி விதித்த போதும் மத்திய அரசு மாநிலங்களை கலந்தாலோசிக்கவில்லை. மாநிலங்களின் வரி வருவாய் குறைந்தபோது மத்திய அரசு அக்கறை கொள்ளவில்லை. மத்திய அரசின் மோசமான வரிக்கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பழியை மாநிலங்களின் மேல் போடப்பார்க்கிறது என்று தெரிவித்தார்.