எம்.எல்.ஏ பழனியப்பனுக்கு மீண்டும் சம்மன் - கிடுக்குப்பிடி போடும் சிபிஐ...!!!
நாமக்கல் கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் சந்தேகத்திற்கிடமான தற்கொலை செய்து கொண்டது குறித்து எம்.எல்.ஏ பழனியப்பன் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டன. இதைதொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சுப்ரமணி வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து சில நாட்களில் சுப்ரமணி மர்மமான முறையில் தமது தோட்டத்து வீட்டில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே சுப்ரமணி எழுதிவைத்த கடிதம் ஒன்று சிபிஐ கைக்கு கிடைத்தது. அதில், கடந்த ஆட்சியின் போது உயர் கல்வி துறை அமைச்சராக இருந்த பழனியப்பனிடம் தொடர்பு வைத்து ஒப்பந்தம் பெற்ற காண்டிராக்டர்கள் தன்னை மிரட்டியதாக சுப்பிரமணியம் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதம் குறித்து சிபிஐ எம்.எல்.ஏ பழனியப்பனுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியது. இதைதொடர்ந்து இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.