ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் சிபிசிஐடி ஐஜி தாமரைக்கண்ணன் ஆஜர்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு சிபிசிஐடி ஐ.ஜி.
தாமரைக்கண்ணன் இன்று ஆஜராகியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி
அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும்
கோரிக்கைகள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலச மஹாலில் ஆறுமுகசாமி விசாரணையைத் துவங்கி நடத்தி வருகிறார்.
இந்த விசாரணை ஆணையத்தில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என பல்வேறு தரப்பினரும்
நேரில் ஆஜராகி தங்களின் வாக்குமூலங்களை அளித்து வருகின்றனர். அவர்களது வாக்குமூலங்களும், பிரமாணப் பத்திரங்களும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை விசாரணை
ஆணையத்தின் ஆலவலகத்திற்கு, குற்ற புலனாய்வுத் துறையின் ஐஜி தாமரைக்கண்ணன் மற்றும், ஜெயலலிதாவின் 3-வது செயலாளராக இருந்த வெங்கட்ராமன் ஆகியோர் நேரில் ஆஜராகில் விளக்கம் அளித்து வருகின்றனர்.