ஓய்வு பெற்றார் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன் !! புதிய தலைவர் நியமனம் !!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக பதவி வகித்து வந்த மசூன் உசேன் கடந்த 30 ஆம் தேதியுடன் ஓண்வு பெற்றதையடுத்து புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களான தமிழகம், புதுவை, கேரளா ஆகியவற்றுக்கு உரிய காவிரி நீரை வழங்க அந்தந்த மாநிலங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைத்தது மத்திய அரசு. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஜூன் 25 ஆம் தேதி மசூத் உசேன் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் அன்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது, ‘கர்நாடகா அரசு தண்ணீர் வழங்காததாலும், நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 21 ல் மேட்டூர் அணையைத் திறக்க இயலவில்லை.
ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடக அரசு இன்னும் முழுமையாக வழங்கவில்லை. ஜூன். ஜூலை தொடர்ந்து வரும் மாதங்களுக்கான நீரையும் சேர்த்து 31.24 டி.எம்.சி தண்ணீரை திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மழை அளவு மற்றும் காவிரியில் உள்ள நீர் வரத்தை பொறுத்தே தமிழகத்திற்கு, ஜூன் ஜூலை மாதங்களுக்கான காவிரி நீர் திறந்துவிட, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மசூத் உசேனுடைய பதவிக் காலம் கடந்த ஜூன் 30 அன்று முடிவடைந்ததால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
அருண்குமார் சின்கா, 1983 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தில் பொறியாளராக பணியைத் தொடங்கினார். அதன்பிறகு நீர்வள ஆணையத்தின் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
குறிப்பாக வெள்ள கட்டுப்பாட்டு இயக்குனராக செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராகி உள்ளார்.காவிரி ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை அருண்குமார் சின்கா நடத்துவார்.