காவிரி: மே 22-ல் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம்...!
காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 22 ஆம் தேதி அன்று திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரததில் கர்நாடகத்துக்கு தண்ணீரின் அளவை அதிகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காவிரி விவகாரத்தில் கடந்த 17 ஆம் தேதி தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் காவிரி வழக்கு விசாரணை நடைபெற்றதால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து காவிரி வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்தது.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், காவிரி விவகாரம் தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காகவும் தி.மு.க. சார்பில் வருகிற 22 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.