பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குகள்... திமுக ஆட்சியின் அராஜகத்தை காட்டுகிறது... ஈபிஎஸ் குற்றச்சாட்டு!!
நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் போடப்பட்ட திட்டங்களுக்கு தற்போது அடிக்கல் நாட்டி வருகின்றனர். இந்த ஓராண்டு காலத்தில் திமுக செய்த சாதனை இதுதான். இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சர் ஸ்டாலின் என்று சொல்லிக் கொள்கிறார். ஊழல் செய்வதில் முதன்மை. லஞ்சம் பெறுவதில் திமுக அரசும் முதன்மையாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதில் திமுக அரசு சாதனை படைத்திருக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் 102 டன் கஞ்சா பிடுபட்டுள்ளதாக கூறியிருக்கிறார். கண்டுபிடித்ததே இவ்வளவு என்றால் கண்டுபிடிக்காத எவ்வளவு என்பதை எண்ணி பார்க்க வேண்டும். கஞ்சா விற்பனையால் மாணவர்கள் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றன. அவர்களின் வாழ்க்கையே சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கொள்கை விளக்க குறிப்பில் சுமார் 2200 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் 148 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏன் அனைவரும் கைது செய்யப்படவில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தலையிட்டு கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதால், காவல்துறை கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர்கள் சுதந்திரமாக செயல்பட்டால் தான் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியும். திமுக அரசு இதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. இளைஞர்களையும், மாணவர்களையும் காப்பாற்ற முடியாமல் விடியல் அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தோடு இணைந்து கொண்டு, தடை செய்ய அரசிற்கு மனம் இல்லை. மனமிருந்தால் சட்டத் திருத்தம் கொண்டு வந்து தடை செய்திருக்கலாம். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது.
ஆளும்கட்சி பிரமுகர்கள் தலையீடு காவல் துறையில் அதிக அளவில் இருப்பதால் காவல்துறை கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சட்டமன்றத்தில் பேசுவதைப் போல் அரசு நிகழ்ச்சியில் பேசுவது சரியாக இருக்காது என கருதுகிறேன். பிரதமரிடம் மனுவாக கொடுத்து வலியுறுத்தி இருக்கலாம். அதற்கு பிரதமர் நடவடிக்கை எடுத்திருப்பார். அதிமுக ஆட்சியில் தமிழக மக்களின் பிரச்சினையை மனுவாக கொடுத்து தீர்வு கண்டு வந்திருக்கிறோம். நூல் விலை உயர்வின் காரணமாக விசைத்தறி கைத்தறி பாதிக்கப்பட்டிருக்கிறது. போராட்டம் நடைபெற்று வருகிறது. நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிக்கையாளர்கள் மீது போடப்படும் வழக்குகள் என்பது இந்த ஆட்சியின் அராஜகத்தை காட்டுகிறது. அதிமுக ஆட்சியில் பத்திரிக்கைச் சுதந்திரம் முழுமையாக வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.