அந்த சமயத்தில் சி.வி.சண்முகத்துடன் இருந்த விழுப்புரம் நகர பாசறைச் செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணன், ஆரத்தி எடுத்த பெண்கள் அனைவருக்கும் கையில் மறைத்து வைத்து 100 ரூபாய் கொடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவிற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்களுக்கு மலர் தூவியும், பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் அந்தந்த தொகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அப்படி ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணம் கொடுக்கப்படுவது குறித்து அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வது குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் தற்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் போட்டியிட்டு வருகிறார். நேற்று முன்தினம் விழுப்புரம் நகரில் உள்ள வண்டிமேடு பகுதியில் சி.வி.சண்முகம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது அங்கிருந்த பெண்கள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஆரத்தி எடுத்தனர். அந்த சமயத்தில் சி.வி.சண்முகத்துடன் இருந்த விழுப்புரம் நகர பாசறைச் செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணன், ஆரத்தி எடுத்த பெண்கள் அனைவருக்கும் கையில் மறைத்து வைத்து 100 ரூபாய் கொடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதன் அடிப்படையில் விழுப்புரம் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரி சந்துரு என்பவர், தெற்கு காவல்நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். அதில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக குற்றச்சாட்டினார். 

இதன் அடிப்படையில் விழுப்புரம் தெற்கு காவல்நிலையத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் நகர பாசறைச் செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணன் மீதும், ஆரத்தி எடுத்த அடையாளம் தெரியாத பெண்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.