வெங்காய விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்தான் காரணம் என பீகாரின் முஸாபர்பூர் சிவில் நீதிமன்றத்தில் கிரிமனல் புகார் வழக்கு தொடரப்பட்டுள்ளது.vv

வெங்காயம் சாகுபடி செய்யும் மாநிலங்களில் பெய்த எதிர்பாராத கனமழையால் உற்பத்தி பாதித்தது. இதன் தொடர்ச்சியாக சப்ளை பாதித்து வெங்காயத்தின் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. 

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200ஐ நெருங்கி விட்டது. வெங்காய விலை உயர்வை தடுக்க மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை, வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சமூக ஆர்வலரான எம் ராஜூ நய்யர் என்பவர்தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள புகார் வழக்கில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக துறை அமைச்சராக ராம் விலாஸ் பஸ்வான் இருந்த போதிலும், வெங்காய விலை உயர்வை தடுக்க தவறிவிட்டார்.

 மேலும், கள்ளமார்க்கெட் காரணமாகதான் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக தனது அறிக்கை வாயிலாக மக்களை அவர் தவறாக வழிநடத்தியுள்ளார். இவ்வாறு அதில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. 

 முஸாபர்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் திவாரி இந்த வழக்கு விசாரணையை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். வெங்காய விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர்தான் காரணம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.vvvv