உதயநிதியின் வெற்றியை எதிர்த்து வழக்கு... மனுதாரருக்கு நீதிபதி எச்சரிக்கை..!
வைப்புத்தொகையை செலுத்தவில்லை என்றால் தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, வெற்றி பெற்றது செல்லும் என முடிவெடுக்கு நேரிடும் என மனுதாரருக்கு நீதிபதி எச்சரித்தார்
திமுக எம்.எல்.ஏ.,வும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திமுக சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார். மே 2 அன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் உதயநிதி வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அதில், உதயநிதி தனது வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்துள்ளதாகவும், ஆகவே அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டது செல்லாது என அறிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இவ்வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வைப்புத்தொகையை செலுத்தவில்லை என்றால் தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, வெற்றி பெற்றது செல்லும் என முடிவெடுக்கு நேரிடும் என மனுதாரருக்கு நீதிபதி எச்சரித்தார். மேலும், இதுதொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை படித்துவிட்டு தெரிவிக்கவும் மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.